திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவது பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சுப்மன் கில்லை நீக்கிவிட்டு அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் வீணடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சனின் ஆட்டம் குறித்தும், மாற்று வீரர் குறித்தும் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனின் மோசமான ஃபார்ம் குறித்துப் பேசிய யுஸ்வேந்திர சாஹல், "சஞ்சு சாம்சன் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் நடுவரிசையில் ஆடத் தொடங்கி, பின்னர் துவக்க வீரராக முன்னேறியவர். சர்வதேச கிரிக்கெட்டில் 10 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு வீரர், ஆட்டத்திறன் சரியில்லை என்பதற்கு அழுத்தம் ஒரு காரணம் என்று கூறுவதை ஏற்க முடியாது" என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இதுவரை 4 வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஒரு வீரர் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் பரவாயில்லை, அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது அணிக்கு நல்லதல்ல" என்று சுட்டிக்காட்டினார்.
சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக இஷான் கிஷன் காத்திருப்பதை சாஹல் நினைவுபடுத்தினார். "தனக்கு பின்னால் இஷான் கிஷன் போன்ற ஒரு சிறந்த வீரர் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார் என்பது சஞ்சு சாம்சனுக்கே தெரியும். இஷான் கிஷன் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் அணிக்குள் வரலாம்" என்று கூறினார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் கடைசிப் போட்டி குறித்துப் பேசிய சாஹல், "உலகக்கோப்பைக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இருப்பினும், கடைசி டி20 போட்டியில் என்ன செய்வது என்பது அணி நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தது.
சஞ்சு சாம்சன் துவக்க வீரராகத் தடுமாறுகிறார் என்றும், இஷான் கிஷன் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் நிர்வாகம் கருதினால், சஞ்சு சாம்சனை அமரவைத்துவிட்டு இஷான் கிஷனை விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க வீரராகக் களமிறக்குவதே சரியான முடிவாக இருக்கும்" என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் சஞ்சு சாம்சனுக்குக் கடைசி வாய்ப்பு கிடைக்குமா அல்லது சாஹல் கூறுவது போல இஷான் கிஷன் உள்ளே வருவாரா?