கொழும்பு : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை மழைக்கு நடுவே துவைத்து எடுத்து விட்டது இந்திய அணியின் பேட்டிங்.
ரோஹித் சர்மா, சுப்மன் கில் அரைசதம், விராட் கோலி, கே எல் ராகுல் சதம் என 356 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்துள்ளது ரோஹித் சர்மாவின் படை. இதன் பின்னணியாக ஒரு சம்பவம் இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

2023 ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு இருந்தே பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மோதல் போக்கை கடைபிடித்து வந்தது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று இந்த தொடரில் ஆட மறுத்ததால் நீடித்த அந்த பிரச்சனை, இலங்கைக்கு பல போட்டிகள் மாற்றப்பட்ட பின்னரும் நீடித்தது.
மழையால் போட்டிகள் தடைபட்ட போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் நஷ்ட ஈடு கேட்டது. மறுபுறம் அதிகாரப்பூர்வமாக பேச முடியாததை எல்லாம் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் நஜாம் சேதி சமூக ஊடகங்களில் பேசி வந்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதுவரை இந்த விவகாரம் கிரிக்கெட் அரசியலாக மட்டுமே இருந்தது. ஆனால், போட்டிகளை மழை காரணமாக கொழும்பில் இருந்து, வேறு மைதானத்துக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்த ஒரு மணி நேரத்தில் ஜெய் ஷா பின்வாங்கி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதுவும் கூட அரசியல் தான். ஆனால், அதன்பின் அவர் பாகிஸ்தானை சந்திக்க இந்திய அணி அஞ்சுகிறது, தொற்று விடுவோம் என நினைப்பதால் தான் இப்படி செய்கிறீர்களா? என கேட்டார்.
இந்த கேள்வி இந்திய வீரர்களையும் சீண்டிப் பார்த்து விட்டது. குரூப் போட்டியில் தடுமாறிய இந்திய பேட்டிங், இந்தப் போட்டியில் வெறி கொண்டது போல இருக்க காரணமே பாகிஸ்தான் அதிகாரியின் சீண்டல் பேச்சு தான் என்கிறார்கள் விமர்சகர்கள்.