துபாய்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு வெறும் அரசியல் ரீதியானதல்ல, இது சர்வதேச கிரிக்கெட் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறியுள்ளது. இந்தப் போட்டி ரத்தானால் சுமார் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் இந்த முடிவால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடும் அதிருப்தி அடைந்துள்ளது. "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீண்ட கால விளைவுகளை யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த முடிவு உலக கிரிக்கெட் அமைப்பையே பாதிக்கும்" என ஐசிசி காட்டமாகத் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிதான் வருவாய் ஈட்டித் தரும் மிக முக்கியப் போட்டியாகும். இந்தப் போட்டியின் மதிப்பு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 4,500 கோடி ரூபாய் ஆகும். தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை மற்றும் உபசரிப்புத் துறை என அனைத்தும் இந்தப் போட்டியை நம்பியே உள்ளன. வேறு எந்தக் கிரிக்கெட் போட்டிக்கும் இவ்வளவு பெரிய வர்த்தக மதிப்பு கிடையாது.
இந்தப் போட்டி ரத்தானால் முதலில் பாதிக்கப்படப் போவது ஒளிபரப்பு நிறுவனங்கள்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது வெறும் 10 விநாடி விளம்பரத்திற்கு 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும். இது இறுதிப் போட்டியை விடவும் அதிகமான தொகையாகும்.
இந்தப் போட்டி நடைபெறாவிட்டால், விளம்பர வருவாயில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள ஜியோ ஸ்டார் நிறுவனம், போட்டி ரத்தானால் ஐசிசியிடம் நஷ்ட ஈடு கோரவும் வாய்ப்புள்ளது.
ஐசிசிக்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி மூலமே கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐசிசி உறுப்பு நாடுகளுக்குப் பிரித்து வழங்கும் நிதியின் அளவும் குறையும். ஐசிசி நிதியை மட்டுமே நம்பி இயங்கும் சிறிய கிரிக்கெட் நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இந்தப் போட்டி ரத்தானால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டுக்கும் தலா 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பொருளாதார ரீதியாக மிகவும் வலுவாக இருப்பதால், இந்த இழப்பை எளிதாகச் சமாளித்துவிடும். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இதைத் தாங்க முடியாது.
ஐசிசியின் மொத்த வருவாயில் 5.75 சதவீதம் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்குச் சுமார் 280 கோடி ரூபாய் ஆகும். ஐசிசி விதிமுறைகளை மீறிப் போட்டியைப் புறக்கணித்தால், இந்த நிதியை ஐசிசி நிறுத்தி வைக்கக்கூடும். ஒப்பந்தத்தை மீறியதற்காக அபராதம், சட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால நிதியுதவி ரத்து போன்ற கடுமையான விளைவுகளைப் பாகிஸ்தான் சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால், அது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கே பெரும் சிக்கலாக மாறும்.