மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான குரூப் ஏ போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி விளையாடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடைசி நேரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். "கடைசி நேரத்தில் இப்படிச் செய்யலாமா?" தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சுனில் கவாஸ்கர், "போட்டியைப் புறக்கணிப்பது என்பது முழுக்க முழுக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு. இதில் இந்தியாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தியாவின் தலையீடும் இதில் கிடையாது. அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றால், அதற்கான விளைவுகளையும் அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்," என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "எனக்குத் தெரிந்தவரை இந்த விவகாரத்திற்கும் வங்கதேச அணிக்கும் சம்மந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, ஒரு பெரிய தொடர் தொடங்குவதற்குத் முன்பு, கடைசி நேரத்தில் இப்படிப் பின்வாங்குவது ஏற்புடையதல்ல. இதற்காக ஐசிசி கண்டிப்பாகப் பாகிஸ்தான் அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
ஐசிசி இதுவரை இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தண்டனையையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. ஆனால், ஐசிசி இப்போது சும்மா இருக்கக் கூடாது என்பது கவாஸ்கரின் வாதம். "தண்டனை கொடுப்பதற்குப் பல வழிகள் உள்ளன. ஆனால், இப்போது ஐசிசி எடுக்கும் நடவடிக்கை, எதிர்காலத்தில் வேறு எந்த அணியும் இதுபோன்று செய்யத் துணியாத வகையில் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் புறக்கணிப்பது வாடிக்கையாகிவிடும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் வீரர்களின் விடுப்பு தொடர்பான பிரச்சனைகளால் வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐசிசி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டிய பாகிஸ்தான், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. எனினும், பாகிஸ்தான் அணியின் இந்தச் செயல் கிரிக்கெட் விதிகளை மீறுவதாக உள்ளதால், அவர்களுக்குத் தடை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.