மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு ஐசிசி விதிமுறைகளின்படி புள்ளிப்பட்டியலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காமல் போனால் எந்த அணிக்கு, எத்தனை புள்ளிகள் கிடைக்கும்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2026 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி களமிறங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச விவகாரத்தில் ஐசிசி மீதுள்ள அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு அணி குறிப்பிட்ட போட்டியில் விளையாட மறுத்தாலோ அல்லது மைதானத்திற்கு வரத் தவறினாலோ, எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எனவே, பிப்ரவரி 15 அன்று பாகிஸ்தான் அணி களமிறங்கவில்லை என்றால், இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு, முழுமையாக 2 புள்ளிகள் வழங்கப்படும். பந்துவீசாமலேயே இந்திய அணிக்கு இந்த 2 புள்ளிகள் கிடைத்துவிடும்.
'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 அணிகள் உள்ளன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். பாகிஸ்தான் விளையாடாமலேயே இந்தியாவுக்கு 2 புள்ளிகள் கிடைப்பது, இந்திய அணி அடுத்த சுற்றுக்குச் செல்வதை மிகவும் எளிதாக்கும். கடினமான போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தான் ஆட்டத்தில் சிரமப்படாமலேயே புள்ளிகள் கிடைப்பது இந்தியாவுக்குப் பெரிய நன்மையாகும்.
மறுபுறம், இந்த முடிவு பாகிஸ்தான் அணிக்குத்தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே 2 புள்ளிகளை இழந்துவிடும். மீதமுள்ள 3 போட்டிகளிலும் (நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியா) அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஏதேனும் ஒரு சிறிய அணியிடம் தோல்வியடைந்தாலோ அல்லது மழை காரணமாகப் போட்டி ரத்தானாலோ, பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடனேயே வெளியேறும் அபாயம் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படும் இந்த முடிவு, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை வெகுவாக பாதிக்கும், அந்த அணியின் வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.