புலவாயோ: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்றின் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஒருவர் செய்த ஃபீல்டிங் தவறு தற்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், அவர் செய்த தவறால் விக்கெட்டை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பிய வைபவ் சூர்யவன்ஷி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இது இந்திய அண்டர் 19 அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்குத் துவக்க வீரராகக் களமிறங்கிய 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். 22 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் என 30 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தின் 8வது ஓவரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
அந்த ஓவரின் மூன்றாவது பந்தை வைபவ் சூர்யவன்ஷி தூக்கி அடித்தார். பந்து நேராகப் பாகிஸ்தான் வீரர் ஹுசைஃபா அஹ்சனை நோக்கிச் சென்றது. மிக எளிதான கேட்ச் வாய்ப்பாக அது அமைந்தது. ஆனால், ஹுசைஃபா அந்தப் பந்தைக் கோட்டை விட்டார்.
கேட்சை நழுவவிட்ட பதற்றத்தில், பந்தை உடனடியாக விக்கெட் கீப்பர் முனைக்குத் தூக்கி வீசினார். அந்த நேரத்தில் வைபவ் சூர்யவன்ஷி கிரீஸை விட்டு வெகு தூரம் வெளியே நின்றிருந்தார். இதனால் அவரை ரன் அவுட் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஸ்டம்பிற்கு அருகில் நின்றிருந்த மற்றொரு பாகிஸ்தான் வீரர் அந்தப் பந்தைப் பிடிக்கத் தவறினார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் கேட்ச் மற்றும் ரன் அவுட் என இரண்டு கண்டங்களில் இருந்து வைபவ் தப்பினார். பாகிஸ்தான் வீரர்களின் இந்தச் சொதப்பலான பீல்டிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிர்ஷ்டவசமாக இரண்டு முறை தப்பித்தாலும், அந்த வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷியால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அடுத்த பந்திலேயே (8.4 வது ஓவர்) முகமது சையம் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். நன்றாக விளையாடி வந்த அவர், கிடைத்த வாழ்வை வீணடித்து 30 ரன்களில் வெளியேறியது இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரேவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 16 ரன்களில் வெளியேறினார். முன்னதாக, டாஸ் போடும் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பர்ஹான் யூசுப் மற்றும் இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோர் பரஸ்பரம் கை குலுக்காமல் சென்றது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில், ஆண்கள், பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் என எந்த அணியாக இருந்தாலும் கேப்டன்கள் கை குலுக்கிக் கொள்வதைத் தவிர்த்து வருவது தொடர்கதையாகி வருகிறது.