மும்பை : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
2023 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார். அவர்கள் அனைவரும் தங்கள் திறனை நிரூபித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் தன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து நூறு ரன்களுக்கும் மேல் கூட்டணியாக சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இஷான் கிஷன் 82, பாண்டியா 87 ரன்கள் குவித்து இருந்தனர்.
அடுத்து நேபாள அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்த நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தனர். ரோஹித் 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து இருந்தனர்.

அடுத்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராக ரோஹித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அரைசதம் அடித்தனர்.
அதே போட்டியில் விராட் கோலி 122, கே எல் ராகுல் 111 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டம் ஆடி சதம் விளாசினர். இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் தங்களை நிரூபித்து இருகின்றனர். இதை சச்சின் குறிப்பிட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
"ராகுல், கோலி சதம் அடித்ததற்கு பாராட்டுக்கள். இந்திய அணியின் மிகப் பெரிய நல்ல விஷயம் நம் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் - ரோஹித், சுப்மன், கோலி, ராகுல், இஷான், ஹர்திக் கடந்த இரண்டு போட்டிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரன் குவித்துள்ளனர். நன்றாக ஆடுகிறீர்கள். இதை தொடருங்கள்" என சச்சின் தன் பதிவில் கூறி இருக்கிறார்.