புலவாயோ: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி செய்த ஒரு செயல் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற வேண்டிய வாய்ப்பு கையில் இருந்தும், பாகிஸ்தான் அணி பின்பற்றிய தவறான உத்தியால் அந்த வாய்ப்பை இந்திய அணிக்கே தாரை வார்த்துள்ளது.
2026 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நடைபெற்ற இந்த வாழ்வா, சாவா ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி 33.3 ஓவர்களுக்குள் எட்டிப்பிடித்திருந்தால், நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணியைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும். இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியிருக்கும். இந்த கணக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கும், மைதானத்தில் இருந்தவர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

ஆனால், 253 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே டெஸ்ட் கிரிக்கெட் போல மந்தமாக விளையாடியது. 33.3 ஓவர்களுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த ஒரு முயற்சியையும் அவர்கள் காட்டவில்லை. ஹம்ஸா ஜஹூர் (42), உஸ்மான் கான் (66) மற்றும் கேப்டன் பர்ஹான் யூசுப் (38) ஆகியோர் மிகவும் நிதானமாகவே ரன் சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் 27 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 101 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வீணடித்திருந்தது. அணியின் ஆலோசகர் சர்பராஸ் அகமது மைதானத்திற்குத் தொடர்ந்து தகவல்களை அனுப்பியும், வீரர்கள் அதிரடியாக ஆட முயற்சிக்கவில்லை. ஒருவர் கூட சிக்ஸ் அடிக்க முற்படவில்லை.
பாகிஸ்தான் அணியின் இந்த ஆட்டத்தைப் பார்த்து வர்ணனையாளர்கள் குழப்பமடைந்தனர். "அவர்கள் அரையிறுதிக்குச் செல்வதை விட, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையில் ஆடுவது போல் தெரிகிறது" என்று முன்னாள் இந்திய வீரர் ரோகன் கவாஸ்கர் விமர்சித்தார். தகுதி பெறுவது கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அதை அவர்கள் முயற்சி செய்யாதது ஏன் என்பது புரியாத புதிராகவே இருந்தது.
அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறிய பாகிஸ்தான் அணி, இறுதியில் போட்டியிலும் தோல்வியடைந்ததுதான் வேடிக்கை. இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே பந்துவீச வந்த உடனேயே ஆட்டம் தலைகீழாக மாறியது. அவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, திடீரென சீட்டுக்கட்டு போலச் சரிந்தது. 151 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த அந்த அணி, இறுதியில் 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. பாகிஸ்தான் அணி தான் வகுத்த தவறான திட்டத்தால் போட்டியை இழந்ததுடன், தொடரை விட்டும் வெளியேறியது. இந்திய அணி வரும் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.