புலவாயோ: 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது 14 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பாகிஸ்தான் வீரருடன் மோதலில் ஈடுபட்டதும், நிலைமை கை மீறிச் செல்லும் முன் சக வீரர் விஹான் மல்ஹோத்ரா அவரைத் தடுத்து நிறுத்தியதும்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று (பிப்ரவரி 1) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அரையிறுதிக்கு தகுதி பெற, பாகிஸ்தான் அணி இந்த இலக்கை 33.3 ஓவர்களில் எட்ட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டால், பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 37வது ஓவரின் போது வைபவ் சூர்யவன்ஷி கோபப்பட்ட சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் வீரர் அலி ஹசன் ஆட்டமிழந்த பிறகு, வைபவ் சூர்யவன்ஷி தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த பாகிஸ்தான் வீரர் ஹுசைஃபா அஹ்சனை நோக்கி ஆக்ரோஷமாக ஓடிச் சென்று கத்தினார்.
இரு வீரர்களும் ஆடுகளத்தின் நடுவில் ஒருவருக்கொருவர் மிக அருகில் வந்து, கடுமையாக முறைத்துக்கொண்டனர். வார்த்தை மோதல் முற்றியதால், கிட்டத்தட்ட கை கலப்பாகும் சூழல் உருவானது. நிலைமை மேலும் மோசமாவதற்குள், சக இந்திய வீரரான விஹான் மல்ஹோத்ரா உடனடியாக ஓடிவந்து, வைபவ் சூர்யவன்ஷியைப் பலமாகப் பிடித்து இழுத்துச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்தச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணிக்கு ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும், மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்தன. வைபவ் சூர்யவன்ஷி, 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால், 47 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த இந்திய அணி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களுக்கு 3 விக்கெட் எனத் தடுமாறியது.
பின்னர், விஹான் மல்ஹோத்ரா மற்றும் வேதாந்த் திரிவேதி ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து அணியை மீட்டது. கடைசி கட்டத்தில் கனிஷ்க் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். கிலான் படேல் 15 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து அதிரடியாகத் தொடங்கியது. ஆனால், அதன்பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். உஸ்மான் கான் (65) மற்றும் ஜஹூர் (42) ஆகியோர் ஓரளவிற்குத் தாக்குப்பிடித்தனர்.
இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் கிலான் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். விஹான் மல்ஹோத்ரா, ஹெனீல் படேல், கனிஷ்க் சௌஹான் மற்றும் ஆர்.எஸ். அம்ப்ரிஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம், இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.