புலவாயோ: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், இந்த வெற்றியை விடப் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும், முன்னாள் கேப்டனுமான சர்பராஸ் அகமது செய்த செயல் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. போட்டியின் நடுவே அவர் மொபைல் போனைப் பயன்படுத்தியது கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய செயல் என்று ரசிகர்கள் கொதித்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்கள் அமரும் அறையில் இருந்த சர்பராஸ் அகமது, தனது கையில் மொபைல் போனை வைத்து எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளின்படி, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இருக்கும் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

போட்டியின் நேர்மையை காக்கவும், சூதாட்டப் புகார்களைத் தவிர்க்கவும் ஐசிசி இந்த விதிமுறையை வகுத்துள்ளது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் போட்டி நடைபெறும் போது மொபைல் போனைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவ அவசரங்கள் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே சிறப்பு அனுமதி வழங்கப்படும். அப்படியிருக்கையில், ஒரு மூத்த வீரரான சர்பராஸ் அகமது இப்படிச் செய்தது விவாதப் பொருளாகி உள்ளது.
கடந்த ஆசிய கோப்பைத் தொடரின் போது, இந்திய வீரர்களின் நடத்தை சரியில்லை என்றும், நெறிமுறையற்ற முறையில் அவர்கள் நடந்து கொள்வதாகவும் சர்பராஸ் அகமது குற்றம் சாட்டியிருந்தார். "விளையாட்டின் நன்மதிப்பு" பற்றிப் பாடம் எடுத்த அவரே, தற்போது அடிப்படை விதிகளை மீறியிருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு, அவரே இப்படிச் செய்யலாமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
அவர் பாகிஸ்தான் அணி மேலாளர் என்ற அடிப்படையில் மொபைல் போன் வைத்திருக்க அனுமதி இருக்கலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இது குறித்து ஐசிசி அல்லது போட்டி நடுவர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தச் சர்ச்சைகளுக்கு இடையே, போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் குவித்தது. வேதாந்த் திரிவேதி 68 ரன்களும், கனிஷ்க் சௌகான் 35 ரன்களும் எடுத்தனர். கடினமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் கிலன் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 33.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை பறித்து, தாங்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் கோட்டை விட்டதோடு போட்டியிலும் தோல்வி அடைந்தது.