செஞ்ரியன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமான நிலையில் இருக்கிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா ஐந்து ரன்களிலும் கில் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.
விராட் கோலி 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கே எல் ராகுல் மட்டும் அபாரமாக விளையாடி 101 ரன்கள் சேர்க்க இந்திய அணி 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 200 ரன்கள் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கினர்.

ஆனால் தனது கடைசி தொடரில் விளையாடுகிற டீன் எல்கார் மட்டுமே தனியாக நின்று 185 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்க பலமாக மார்க்கோ ஜான்சன் 147 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 408 ரன்கள் குவித்துள்ளது. 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதில் ரோகித் சர்மா டக் அவுட் ஆகியும் ஜெய்ஸ்வால் ஐந்து ரன்களிலும் ஆட்டம் இழக்க, இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இந்திய அணி 150 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. தற்போது மூன்றாவது நாள் தான் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சி இருப்பதால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது செஞ்சூரியன் நகரில் மழை அடிக்கடி பெய்து வருவதால் தற்போது மழை வந்தாவது இந்திய அணியை காப்பாற்றுமா என ரசிகர்கள் வேண்டி கொள்ள தொடங்கி விட்டார்கள். ஆனால் மழை வந்தால் கூட இந்திய அணியை காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு நாள் முழுவதும் மழையால் ரத்தானாலும் கூட தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை எளிதில் சுருட்டுவதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது.இதனால் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா மறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தியா பெருசாக சாதிக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது சோகமான நிலை டிராவிட் குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.