செஞ்சூரியன் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்கியது.
மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்றது குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் பௌவுமா ஆடுகளம் மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டு இருந்தது.

இதனால் ஈரப்பதம் நன்றாக இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் சிறப்பாக பந்து வீசினால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று கூறினார். மேலும் இன்றைய ஆட்டத்தில் பர்கர் மற்றும் டேவிட் ஆகிய இரண்டு வீரர்கள் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமாவதாக கூறியுள்ளார். இந்தியாவை எதிர்கொள்வது எப்போதுமே கடினம்தான் என்று குறிப்பிட்ட பெவுமா சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வென்று என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இதனால் இந்த டாஸ் இழந்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். தென்னாபிரிக்க ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று எனக்கு தெரியும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதால் ரன்களை குவிக்க வேண்டும். எங்களுடைய பவுலர்கள் தங்களுடைய பணியை நாம் சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தற்போது வானம் மேகமூட்டத்துடன் இருக்கிறது. இந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொண்டு பேட்ஸ்மேன்கள் களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நிறைய நம்பிக்கையுடன் இந்த தொடரை நாங்கள் அணுகுகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் வெற்றி அருகே வரை வந்தோம்.
இம்முறை தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களமிறங்குகிறோம். இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் களமிறங்குகிறார். ஜடேஜாவுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவருக்கு பதிலாக அஸ்வின் விளையாடுகிறார். இதே போன்று வேகபந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இன்றைய ஆட்டத்தில் அறிமுகம் ஆகிறார். சிராஜ், பும்ரா,சர்துல் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.