தென்னாப்பிரிக்காவுக்கு இதுவரை இந்திய அணி 11 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த நிலையில் இந்த வரலாற்றை மாற்றும் உத்வேகத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான அணி களம் இறங்குகிறது.
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது 2018 ஆம் ஆண்டு பலம் வாய்ந்த அணியாக விளங்கியது. அப்போது இந்திய அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி தொடரை வென்றது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இம்முறை தென்னாபிரிக்கா மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் என் அருகில் இருக்கும் நபர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவதில்லை என்று பிளாண்டரை காட்டி பேசினார். மேலும் பேசிய அவர் தென்னாப்பிரிக்காவை நாங்கள் கடந்த இரண்டு முறை இங்கு வந்தபோது வீழ்த்தி இருப்போம்.
ஆனால் இந்த வீரர் தான் எங்களை தடுத்து விட்டார். பலரும் ரபாடா நெகிடி என்று அவருடைய ரெகார்டுகளை பற்றி பேசுகிறார்கள். நீங்கள் வெர்னன் பிளாண்டரின் ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள். அவர் இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று தெரியும். நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போதெல்லாம் முக்கியமான விக்கெட் வீழ்த்தி விடுவார் என்று பிளாண்டரை ரவி சாஸ்திரி பாராட்டினார்.
2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்காவின் பிளாண்டர் 15 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை அந்த தொடரில் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். தற்போது தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சில் ரபாடா, மார்க்கோ ஜான்சன், டேவிட் பெட்டிங்காம், பர்ஜர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.