மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இல்லாமல் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களையும் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பிசிசிஐ தரப்பில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை போல் இஷான் கிஷனை தேர்வு செய்யாமல், கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்த பிசிசிஐ செய்துள்ளது. ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடரில் கேஎல் ராகுலின் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்ததால், அவரையே தொடர்ந்து பயன்படுத்த ரோகித் சர்மா முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக அவருடன் பேசியதாகவும் பார்க்கப்படுகிறது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன், கேஎஸ் பரத் உள்ளிட்ட வீரர்கள் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தேர்வு செய்யப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ரஹானே, புஜாரா உள்ளிட்ட வீரர்கள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு பயணிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.