சென்னை: இந்திய அணி வீரர்களையும், அவர்கள் அடையும் வெற்றிகளையும், பிசிசிஐ வருமானத்தை பார்த்து பலரும் பொறாமைப்படுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. சென்சுரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும், கேப் டவுனில் அமைக்கப்பட்ட மோசமான பிட்சிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி மிகப்பெரிய வெற்றியை படைத்துள்ளது. 10 நாட்கள் நடக்க வேண்டிய டெஸ்ட் தொடர், வெறும் 4.5 நாட்களில் முடிவடைந்துள்ளது.

இதனிடையே சென்சுரியன் மைதானத்தில் இந்திய அணி தோல்வியடைந்த போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் கடுமையாக விமர்சித்தார். இந்திய அணி அதன் தகுதிக்கு ஏற்ப வெற்றிகளை பெறவில்லை என்று விமர்சித்தது பல்வேறு தரப்பினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மைக்கில் வாகனின் கருத்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில், உலக கிரிக்கெட்டில் இந்திய அணி தான் முக்கிய சக்தி என்று நாம் சொல்லி வந்தாலும், 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை நாம் வெல்லவில்லை. அது உண்மைதான். ஆனால் ஒரு டெஸ்ட் அணியாக இந்த இந்திய அணி மிகச்சிறந்த வெற்றிகளை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தும், வென்றும் இருக்கிறோம்.
மைக்கில் வாஹன் கூறியபின், இந்தியாவிலும் சிலர் ஆமோதித்து பேசினார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்பது சின்ன சின்ன தவறுகளால் மாற்றமடைந்துவிடும். எவ்வளவு பெரிய தோல்விகளில் இருந்தும், இந்த இந்திய அணியால் கம்பேக் கொடுக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
கேப்டன் டவுன் பிட்ச் மோசமாக இருந்ததற்கு சுப்மன் கில்லின் விக்கெட்டே சாட்சி. ஒரு பந்து கழுத்திற்கு கீழாகவும், மற்றொரு பந்து முட்டிக்கு கீழாகவும் பவுன்ஸ் ஆகிறது. இருந்தும் வென்றிருக்கிறோம். வெற்றிகளை மட்டுமல்லாமல் சில வாழ்க்கை பாடங்களையும் கொடுத்துள்ளது. கேப் டவுன் போட்டிக்கு பின் நடுவர்கள், பிட்சின் ரேட்டிங்கை அளிப்பதற்கு விவாதம் நடத்தி வருகிறது.
இதுவொரு மோசமான பிட்ச் என்று அவர்கள் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போதே கூறியது தான். நம்மிடம் எதையாவது விற்க வேண்டும் என்று விற்கிறார்கள். ரசிகர்கள் எதை விற்றாலும் வாங்க கூடாது. நாக்பூர், இந்தூர் பிட்சை நாம் ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்.
இந்திய அணி என்றால் மட்டும் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து முன் வைக்கிறார்கள். அந்த இரட்டை நிலைப்பாடுகளுக்கு விலைப் போகாதீர்கள். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை கண்டு பாதி பேருக்கு மேல் பொறாமைப்பட்டு வருகிறார்கள். நாளை இந்தியாவில் டெஸ்ட் விளையாடும் போது 3 நாட்களில் போட்டி முடிந்தால், பந்து திரும்பியதோ என்று கிண்டல் செய்வார்கள். அப்போது ரசிகர்கள், 4.5 நாட்களில் டெஸ்ட் தொடர் முடிவடைந்த போது எங்கே சென்றீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.