மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் 1992 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடி வருகிறது. ஆனால் இந்த 31 ஆண்டுகளில் ஒரு முறை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றவில்லை.
உலக கோப்பையில் தோல்வி அடைந்த ரோகித் சர்மாவுக்கு இந்த வரலாற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்தி முடித்தால் அது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆனந்தமாக இருக்கும். இதனால் ரோகித் சர்மா,விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று உத்வேகத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தென்னாபிரிக்க ஆடுகளத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாட வேண்டும். இங்கு தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் விளையாடினால் நிச்சயமாக நீங்கள் நெருக்கடியை சந்திப்பீர்கள்.
இதனால் அடிக்க வேண்டிய பந்தை அடித்து விளையாடுங்கள். பவுலர்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து அதனை அடியுங்கள். எந்த ஷாட்டுகளை அடித்தால் ரன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதனை களத்தில் வெளிப்படுத்துங்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். மேலும் நாளைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பணியை கே எல் ராகுல் தான் செய்வார் என்று குறிப்பிட்டுள்ள ரோகித் சர்மா, சவால்களை தாமே விரும்பி ஏற்றுக்கொண்டு அதில் சிறப்பாக செயல்பட்டு கே.எல் ராகுல் வெற்றி காண்பதாக ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் கே எல் ராகுலின் செயல்பாடு மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் அவர் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என்று தமக்கு தெரியவில்லை என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு முறை தாங்கள் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியின் அருகே வந்து இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் விளையாடிய இந்திய அணி செய்யாததை தாங்கள் செய்ய இருந்தோம் என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது அதே நம்பிக்கையுடன் தற்போது மீண்டும் களமிறங்குகிறோம் என்று கூறியுள்ளார்.உலகக் கோப்பை தொடர் பைனலில் தாங்கள் அடைந்த தோல்விக்கு தென்னாப்பிரிக்கா தொடர் நல்ல மருந்தாக இருக்குமா என்று எனக்கு தெரியாது. உலகக் கோப்பை என்பது உலக கோப்பை தான் என்று ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.