செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருவரும் களமிறங்கினர்.

தென்னாப்பிரிக்கா பவுலர்கள் ரபாடா மற்றும் மார்க்கோ யான்சன் ஆகியோர் கட்டுகோப்பாக பந்து வீசி இருவரையும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். எனினும் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி விடக்கூடாது என்பதற்காக இருவருமே தங்களுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி ஆடினார்கள். குறிப்பாக ரோகித் சர்மா அபாரமாக ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். ஒரு கட்டத்திற்கு மேல் தென்னாப்பிரிக்கா பவுலர்களின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில்தான் ரோகித் சர்மாவை எலிக்கு பொறி வைத்து பிடிப்பது போல் ரபாடா ஆட்டமிழக்க வைத்தார். ரோகித் சர்மா மோசமான பந்தை அடித்து ஆடுவதை கவனித்த ரபாடா ரோகித் சர்மாவுக்கு ஒரு ஷார்ட் பாலை வீசினார். இந்த பாலை பார்த்ததும் புல் ஷாட் ஆடி ரன்களை எடுக்க ரோகித் சர்மா முயற்சி செய்தார். ஆனால் அது பைன் லேக் நின்ற பீல்டரிடம் கேட்ச் ஆக மாறியது.
இந்த பந்தை மட்டும் ரோஹித் சர்மா அடிக்காமல் விட்டிருந்தாலோ இல்லை ரிஸ்க் எடுக்காமல் தரையோடு அடித்து இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் ரோகித் நிலைத்து நின்று ஆடி இருக்க முடியும். ஆனால் தென்னாப்பிரிக்கா விரித்த வலையில் ரோகித் சர்மா சிக்கிக்கொண்டார். உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ரோகித் சர்மா தற்போது தான் இந்திய அணிக்காக விளையாடுகிறார். ஆனால் அவர் ஐந்து ரன்களில் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.