மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சாதிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அந்நிய மண்ணில் ஒரு இளம் புயல் எந்த தாக்கத்தையும் நீண்ட நாட்களாக ஏற்படுத்தவில்லை.
இனி சீனியர் வீரர்கள் தேவை இல்லை என்ற முடிவை எடுத்துள்ள இந்திய அணி பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு தற்போது புஜாராவுக்கு பதில் கில்லை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஆனால் கடந்த ஆறு இன்னிங்ஸாக நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் கில் 30 ரன்கள் கூட தாண்டவில்லை என்பது சோகமான கதை.

கடந்த மார்ச் மாதம் அகமதாபாத் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 128 ரன்கள் கில் அடித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் கில் தன்னுடைய இடத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் ரன் அடித்தே ஆகவேண்டும் என சஞ்சய் மஞ்சுரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கில் நல்ல திறமையான வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் போட்டியிலே அந்நிய மண்ணில் தரமான வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக 90 ரன்கள் குவித்திருக்கிறார். அப்படி என்றால் நிச்சயமாக அவர் திறமையான வீரர் தான். ஆனால் திறமை இருந்தால் மட்டும் போதுமா? அதை களத்தில் காட்ட வேண்டாமா?
ஆனால் தற்போது ரன்கள் அவரிடம் வருவதில்லை. கில்லின் டெஸ்ட் சராசரி 30க்கு கீழ் சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணிக்காக அவர் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டார்.கில் ஒன்றும் புதிய வீரர் அல்ல. இன்னும் பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது கில்லுக்கு தான் நெருக்கடியை ஏற்படுத்தும்.டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
டி20 கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்த வரை அவர் நன்றாக தான் விளையாடி வருகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பு வழங்கும் என நினைக்கிறேன். ஆனால் அவர் ரன் அடித்தே ஆக வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுவரை 34 இன்னிங்ஸ் டெஸ் போட்டியில் விளையாடியுள்ள கில் இரண்டு சதம் நான்கு அரை சதம் அடித்திருக்கிறார்.