தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆடுவது எளிதல்ல.. நாங்கள் பயந்தது அந்த ஒருவருக்கு தான்.. தெ.ஆ. ஜாம்பவான்!
கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆடிய இந்திய வீரர்களில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான் என்று ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
31 ஆண்டுகளாக இந்திய அணியால் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. அந்த வரலாறு மீண்டும் தென்னாப்பிரிக்கா அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலமாக மீண்டும் வரலாறு தொடர்கிறது.

இந்திய அணியின் தோல்விக்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், பேட்டிங் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணி 131 ரன்களில் ஆல் அவுட்டான அதே பிட்சில் தான் தென்னாப்பிரிக்கா அணியின் பொறுப்பு கேப்டன் டீன் எல்கர் 185 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். பவுண்டரிகள் மூலமாகவே தென்னாப்பிரிக்கா அணி அதிக ரன்களை சேர்த்தது.
அதனை தான் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் செய்தனர். அதேபோல் பந்துகள் பழையதாகும் வரை காத்திருக்காமல் புதிய பந்தை அட்டாக் செய்கிறேன் என்ற பேரில் ரோகித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட அனைவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளுக்கு பயிற்சியளிக்க முடியாது என்று கூறி டெஸ்ட் போட்டிக்கு தயாராக சென்றார் பயிற்சியாளர் டிராவிட்.
இந்த அடிப்படையை கூட வீரர்களுக்கு கூறாமல் இந்திய அணியை எப்படி தயார் செய்தார் என்பது தான் இதுவரை ரசிகர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது. இதுகுறித்து தென்னப்பிரிக்கா ஜாம்பவான் ஆலன் டொனால்ட் பேசுகையில், தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆடிய இந்திய வீரர் ஒருவர் தான். மிடில் ஸ்டம்ப் லைனில் நின்று ட்ரிக்கர் மூவ்மெண்ட் உடன் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் தான். பந்தை அடிப்பது போல் வந்து, சிறப்பாக தவிர்த்து விலகுவார்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டுமென்றால் பந்தை விளையாடாமல் தவிர்க்க தெரிந்திருக்க வேண்டும். பந்தை தேடி பேட்ஸ்மேன்கள் செல்லாமல், பேட்ஸ்மேனை நோக்கி பவுலர்களை வீச வைக்க வேண்டும். அப்படி பவுலர்களை வரவழைக்கும் போது நிச்சயம் சிறப்பாக ரன்களை சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 1,165 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 31, 2023, 19:13 [IST]
Other articles published on Dec 31, 2023


Click it and Unblock the Notifications