கொழும்பு : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்து இருந்தாலும், இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால், போட்டி முடிந்த உடன் கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சியில், ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசி அவரை மகிழ்வித்தார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக அமைந்தது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்று ஒருநாள் போட்டி இலங்கையின் கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 53 ரன்களை குவித்து இருந்தார்.
மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால், இந்திய அணி நம்பிக்கையுடன் பந்து வீசியது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்த இந்திய அணி இலங்கை அணியை 172 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கு பின் மைதானத்தில் பிற இந்திய வீரர்களுடன் நின்று இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, ரசிகர் ஒருவர் தேசியக் கொடியுடன் நிற்பதை பார்த்தார். அந்த ரசிகர் தேசியக் கோடியை கீழே இறக்கி வைத்திருந்தார். இந்தியா வெற்றி பெற்றதால் தேசியக் கொடியை மேலே தூக்கி நன்றாக ஆட்டுமாறு தன் கையில் வைத்திருந்த பேட் மூலமாக அவருக்கு சைகை காட்டினார்.
இதை எதிர்பாராத அந்த ரசிகர், ரோஹித் சர்மா தன்னுடன் சைகையில் பேசிய மகிழ்ச்சியோடு, தேசியக் கொடியை மேலே தூக்கி ஆட்டினார். அதைக் கண்டு ரோஹித் சர்மாவும் மகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. பலரும் ரோஹித் சர்மா செயலைக் கண்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுதான் கடைசி சான்ஸ்.. ஆசிய கோப்பையில் செம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை காப்பாற்றிய இந்திய அணி!
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.