கொழும்பு : தோனி இல்லாதபோது தான் அவரது அருமை இந்திய ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக தெரிகிறது.
தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் அவரது முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றுக்கு ஈடு இணையே இல்லை. அவரை பார்த்து கே எல் ராகுல் போன்ற இளம் தலைமுறை விக்கெட் கீப்பர்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

தோனியை போல சிறப்பாக கீப்பிங் செய்து வரும் கே எல் ராகுல் சொன்ன முடிவை கேட்காமல், குல்தீப் யாதவ் சொன்ன பேச்சை கேட்டு ரோஹித் சர்மா பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சுழலில் சிக்கி தங்கள் விக்கெட்களை இழந்தனர்.
இதை அடுத்து 214 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. அந்த அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 12வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்து, இலங்கை பேட்ஸ்மேன் சரித் அசலங்கா காலில் பட்டது.
குல்தீப் அது எல்பிடபுள்யூ விக்கெட் தான் என்பதில் உறுதியாக இருந்தார். அம்பயர் எல்பிடபுள்யூ கொடுக்க மறுத்தார். அடுத்து 30 வினாடிகளில் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்க நேரம் துவங்கியது. குல்தீப், கேப்டன் ரோஹித் சர்மாவை ரிவ்யூ கேட்குமாறு கூறினார்.
ஆனால், விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் நிச்சயம் பந்து, பேட்டில் பட்டது. ரிவ்யூ வேண்டாம் என தன் தலையை மறுப்பது போல ஆட்டினார். குழப்பத்தில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, பேட்ஸ்மேன் அருகே நின்று இருந்த கீப்பர் ராகுல் பேச்சை கேட்காமல், குல்தீப் யாதவ் பேச்சை கேட்டு ரிவ்யூ எடுத்தார். ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்டது உறுதியானது. அதன் விளைவு, இந்தியா ஒரு ரிவ்யூவை வீணாக்கியது.
ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மாவுக்கு ரிவ்யூ கேட்க அனுபவம் போதவில்லை என விமர்சனம் செய்யத் துவங்கினர். அதற்கு காரணம், ரிவ்யூ கேட்கச் சொல்லி அடம் பிடித்த குல்தீப் யாதவ் தான்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. தவறான ரிவ்யூ கேட்க வைத்த குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் 4 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.