மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ய கிடைத்த வாய்ப்பை விராட் கோலி மீண்டும் தவறவிட்டுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய ரோகித் சர்மா ஆட்டத்தின் 2வது பந்திலேயே போல்டாகி 4 ரன்களில் வெளியேறினார்.

இதன்பின் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி - சுப்மன் கில்லுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 16.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. அதேபோல் விராட் கோலியும் 50 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அடிக்கும் 13வது அரைசதம் இதுவாகும்.
இதையடுத்து இந்திய அணியின் சுப்மன் கில்லும் அரைசதம் விளாச, இருவரும் அதிரடிக்கு திரும்பினர். இதனால் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியும் பறந்து கொண்டே இருந்தது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் சொந்த மண்ணில் வைத்தே அவரின் ஒருநாள் சதம் சாதனையை விராட் கோலி சமன் செய்வார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த அளவிற்கு விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென சுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, விராட் கோலியின் கவனம் கொஞ்சம் சிதறியது. இதன்பின் மதுஷங்கா வீசிய அடுத்த ஓவரிலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். அவர் வீசிய ஸ்லோயர் பந்தை கணிக்காமல் பேட்டை வேகமாக விராட் கோலி கொண்டு வந்த போது, அது எளிதாக நிசாங்காவால் கேட்ச் பிடிக்கப்பட்டது. இதனால் 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 95 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தற்போது இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்து இரண்டாவது முறையாக தவறவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர். இருப்பினும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்கக்காராவின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 145 முறை 50 ரன்களுக்கு மேல் விளாசி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு பின் விராட் கோலி மற்றும் சங்கக்காரா 118 அரைசதங்களுடன் இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், 100வது சதத்தை அடிக்க சச்சின் டெண்டுல்கருக்கு நீண்ட மாதங்கள் எடுத்துக் கொண்டதை போல், விராட் கோலியும் பதற்றத்தில் தடுமாறுகிறாரோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், இந்த சாதனையை அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.