வலுக்கும் மோதல்
ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே இருந்த மறைமுகமான மோதல் பொது வெளிக்கு வரத் துவங்கி உள்ளது. ரோஹித் சர்மா ஏற்கனவே விராட் கோலியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதில்லை. அன்பாலோ செய்து விட்டார். கடந்த வாரம் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவையும் அன்பாலோ செய்து இருக்கிறார் ரோஹித்.
விசாரணை இல்லை
இது மட்டுமின்றி, கேப்டன் பதவிக்கான நகர்வுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. உலகக்கோப்பை முடிந்த போதே இந்த தகவல்கள் வெளியானது. அப்போது பிசிசிஐ விசாரணை செய்யும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
பிசிசிஐ மெத்தனம்
அது மட்டுமின்றி, வீரர்கள் அவர்களாகவே சொன்னால் தான் மோதல் பற்றி விசாரிப்போம். ஊடக செய்தி எல்லாம் கட்டுக்கதை என்றும் சில மூத்த பிசிசிஐ அதிகாரிகள் கூறி வருவது நிலைமையை இன்னும் மோசமாக்கி இருக்கிறது.
அணிக்குள் பிளவு
உலகக்கோப்பை தொடரின் முடிவிலேயே அணிக்குள் பிளவு இருக்கிறது என கூறப்பட்டது. கேப்டன் கோலி சார்பாக சில வீரர்களும், ரோஹித் பக்கம் சில வீரர்களும் இருப்பதாக கூறப்பட்டது. அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
வெ.இண்டீஸ் தொடரில் பாதிப்பு?
ஆனால், சில வீரர்கள் கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடவடிக்கைகளில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இந்த சூழ்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி நிலையாக விளையாடுமா? வீரர்கள் இடையே இறுக்கமான மனநிலை இருந்தால் அவர்கள் எப்படி சரியாக விளையாட முடியும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
பேச வேண்டும்
வீரர்கள் இடையே ஆன இந்த சிக்கலை பிசிசிஐ தான் முன்னின்று பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிசிசிஐயில் இருக்கும் சிலர் கூறுகிறார்கள். ஆனால், மூத்த அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
வெற்றி அவசியம்
உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியால் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்திய வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அபார வெற்றிகளை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால், பிரச்சனைகளை தீர்த்து வைக்காமல் பிசிசிஐ காட்டும் மெத்தனம் இந்திய அணிக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும்.