பரபர செய்திகள்
2௦19 உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக சலசலப்புகள் எழுந்தன. விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்பட்டது.
மறுக்கும் பிசிசிஐ
அது தொடர்பான பல செய்திகள் கசிந்த நிலையில், பிசிசிஐ உயர் அதிகாரிகள் அதை மறுத்து வந்தனர். எல்லாமே பத்திரிக்கைகள் எழுதும் கட்டுக்கதை என்றார்கள். எந்த விசாரணையும் செய்ய முடியாது எனவும் மறுத்தார்கள்.
கடும் பாதிப்பு
பிசிசிஐ-யின் இந்த மெத்தனப் போக்கால் இந்திய அணி கடுமையாக பாதிப்படையும் என கூறப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி சில போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும் என சிலர் அச்சம் தெரிவித்தனர்.
ரகசியத் திட்டம்
ஆனால், பிசிசிஐ கோலி - ரோஹித் மோதல் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக தெரிந்து கொண்டு இருவரிடமும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தனிப்பட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இருவரிடையே சமாதானம் செய்து வைக்க ரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பஞ்சாயத்து
அதன்படி அமெரிக்காவில் நடக்க உள்ள இரண்டு டி20 போட்டிகளின் போது ரோஹித் சர்மா - கோலியிடம் பேசி சமாதானம் செய்ய பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார்.
மூடி மறைக்கிறார்கள்
இந்தியாவில் பிசிசிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யாமல், அமெரிக்கா சென்று ரகசியமாக இந்த விவகாரத்தை கையாள்வதற்கு முக்கிய காரணம், இந்திய அணியில் எந்த குழப்பமும் இல்லை என்பதாக வெளிக்காட்டி கொள்வதற்கே என்கிறார்கள். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், அது ரசிகர்களை பாதிக்கும். அதனால், வியாபார ரீதியிலான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் தான் இந்த ரகசியத் திட்டம் என்கிறார்கள். எப்படியோ பிரச்சனை தீர்ந்தால் சரி.