அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ரன் ரேட் குறையாமல் இருக்க தரமான திட்டத்தை கேப்டன் ரோகித் சர்மா செயல்படுத்தி வருகிறார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை சிறிய பதற்றத்தை ஏற்படுத்தி பின் பந்தாடியது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை ருத்ரதாண்டவம் ஆடியது.

இதன் மூலம் 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் நெட் ரன் ரேட்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 90 பந்துகள் மீதம் வைத்து வென்றதே இந்திய அணியின் ரன் ரேட் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரை போலவே உலகக்கோப்பை தொடரிலும் நெட் ரன் ரேட் மிகவும் முக்கியம். ஏனென்றால் ஒவ்வொரு அணியும் 9 லீக் போட்டிகளில் விளையாடி, அதில் இருந்து அரையிறுதி சுற்றுக்கு 4 அணிகள் முன்னேறும். முதல் பாதியில் சிறப்பாக ஆடும் அணி, இரண்டாம் பாதியில் சொதப்பும். சில நேரங்களில் முதல் பாதியில் சொதப்பும் அணி, இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுக்கும்.
இதனால் ஒரே புள்ளியில் இருக்கும் அணிகள் நெட் ரன் ரேட் மூலமாகவே அரையிறுதி வாய்ப்பை பெறும். கடந்த உலகக்கோப்பை தொடரில் கூட நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் மூலமாக அரையிறுதி வாய்ப்பை பெற்றது. இதனை மனதில் வைத்தே இந்திய அணி தொடக்கத்திலேயே நெட் ரன் ரேட்டையும் உயர்த்தியுள்ளது.
அதேபோல் நெட் ரன் ரேட்டை உயர்த்தி கொள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான திட்டத்தையும் கையில் வைத்துள்ளதாக தெரிகிறது. ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை உள்ளிட்ட சிறிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றியை பெற்று ரன் ரேட்டை காப்பாற்றி கொள்ள இந்திய அணி முயற்சிக்கும். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அதிரடியான ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் எதிர்பார்க்கலாம்.