IND VS ENG : இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டி இரு அணிக்கும் மிகவும் ஸ்பெஷல் ஆனது ஆகும். காரணம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வினுக்கும் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பாரிஸ்டோக்கும் இது நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும்.
இதனால் இவ்விரு வீரர்களுக்காக வெற்றியை கொடுக்க வேண்டும் என இரண்டு அணிகளுமே கடுமையாக பயிற்சிகளை எடுத்து வந்தது. தமிழ்நாட்டில் இருந்து பிறந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடிய எந்த வீரரும் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை.

இந்த நிலையில் அஸ்வின் இப்படி ஒரு மைல் கல்லை இன்று தொட்டுள்ளார். ஆனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. தர்மசாலா குளிர்பிரதேசம் என்பதால் அதிக அளவு பனிப்பொழிவும் மழையும் பெய்ய வாய்ப்பும் இருப்பதாக தெரிகிறது. தர்மசாலா வானிலை நிலவரப்படி இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது.
இதேபோன்று இரண்டாவது நாள் அன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி தாமதமாக தொடங்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடைசி மூன்று நாட்களுக்கு பகல் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இதனால் கடைசி மூன்று நாட்கள் இந்த பாதிப்பும் இல்லாமல் போட்டி இருக்கும் என்று தெரிகிறது .மேலும் இந்த ஐந்து நாட்களுக்கும் தட்பவெட்ப நிலை எட்டு டிகிரியில் இருந்து 12 டிகிரி வரை தான் இருக்கும்.
அதே சமயம் மழை பெய்தால் தட்பவெட்ப நிலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இப்படி கடுமையான சூழலில் தான் அஸ்வின் தன்னுடைய நூறாவது டெஸ்டில் விளையாட இருக்கிறார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே குளிர்பிரதேசத்தில் பந்தை பிடித்து வீசுவதில் பிரச்சனையாக இருக்கும். மேலும் மழையும் அடிக்கடி பெய்தால் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். இதனால் சுழற் பந்துவீச்சாளர்களால் சரியாகப் பந்து வீச முடியாது. இது அஸ்வின் போன்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.