IND VS ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. குளிர் பிரதேசமான தர்மசாலாவில் தற்போது அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்றி பாஜக வேட்பாளருக்கு ஓட்டு போட்டதால் பிரச்சனை வெடித்திருக்கிறது.
இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் சிலரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்ததால் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் ஹிமாச்சல் பிரதேச பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் ஹிமாச்சல பிரதேசத்தை நோக்கி தான் சென்றிருக்கிறது.

காரணம் இந்தியா இங்கிலாந்து அணிகளின் கடைசி டெஸ்ட் இங்குதான் நடைபெறுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடைசியாக இங்கு நடைபெறும் போது பெரும் சர்ச்சையில் தர்மசாலா சிக்கியது. காரணம் தர்மசாலாவின் மைதானத்தின் பவுண்டரி லைன் பக்கத்தில் மோசமாக புற்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சீதோசன நிலை காரணமாக இவ்வாறு மாறிவிட்டதாக பிசிசிஐ விளக்கம் அளித்த நிலையில் அங்கு விளையாடிய ஒட்டுமொத்த அணி வீரர்களும் இந்த மைதானத்தில் எல்லைக்கோடு பகுதிகள் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இங்கு பீல்டிங் செய்யவே முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்றாக தர்மசாலா இருக்கும் நிலையில் உலக கோப்பையில் மற்ற அணிகள் சொன்ன குற்றச்சாட்டு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு மீண்டும் வரக்கூடாது என்பதற்காக பிசிசிஐ கோடிக்கணக்கில் செலவு செய்து அந்த பிரச்சினையை தீர்வு செய்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தர்மசலாவில் உள்ள மைதானத்தை பிசிசிஐ சரி செய்துள்ளது.
மேலும் மைதானம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் வகையில் புற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டெஸ்ட் மேட்ச் என்பதால் போட்டி நடைபெறும் நேரம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மைதானம் காட்சியளிக்கும். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இயற்கையை விரும்புவர்கள் கூட இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.