IND VS ENG : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. நல்ல வேளையாக தர்மசாலாவில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்பே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. ஏனென்றால் தர்மசாலாவில் டெஸ்ட் போட்டி எப்படி நடைபெறும் எதற்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும் என்பதை கணிக்கவே முடியாது.
இங்கு இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி தான் நடைபெற்று இருக்கிறது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய ஆடு களங்கள் பொதுவாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் செயல்படும்.

ஆனால் தர்மசாலா குளிர் பிரதேசம் என்பதால் இங்கு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் செயல்படும். அதே வேளையில் ஆடுகளத்தில் புற்கள் நறுக்கப்பட்டு காய்ந்த நிலையில் இருந்தால் சுழற் பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தலாம். அதேவேளையில் சூரியனை மேக கூட்டங்கள் மறைத்து குளிரான சூழல் நிலவினால் பந்து ஸ்விங் ஆகும்.
மேலும் மேக கூட்டமும் சூரியனும் அடிக்கடி இங்கு கண்ணாம்பூச்சி நடத்தும். இதனால் இந்த ஆடுகளம் இப்படித்தான் செயல்படும் என்று கணிக்கவே முடியாது. இதேபோன்று ஆடுகளம் பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும். அதாவது பந்து பேட்டிற்கு நன்றாக வரும். இதனால் பேட்ஸ்மேன்களும் கஷ்டமே இல்லாமல் ரன்களை குவிக்கலாம். அதுவும் இங்கிலாந்து போன்ற அதிரடி வீரர்கள் நிறைந்த அணிக்கு தர்மசாலா ஆடுகளம் வரப் பிரசாதமாக இருக்கும்.
இந்த ஆடுகளம் எவ்வாறு வித்தியாசமாக மாறுபடும் என்பதை ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். இங்கு நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 300 ரன்களும், இந்தியா 332 ரன்களும் எடுத்திருந்தது. இதனை அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 137 ரன்களில் எல்லாம் சுருண்டது.
இதனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமாக மாறிவிட்டது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி வெறும் இரண்டே விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் இந்த ஆடுகளம் எப்படி மாறும் வானிலை எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் கணிக்கவே முடியாது. இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணி தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும். இயற்கையாகவே இந்த ஆடுகளம் இங்கிலாந்து வீரர்களுக்கு தான் கூடுதல் சாதகத்தை கொடுக்கும்.