IND VS ENG : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் நிகழ உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் உலகின் மிகச்சிறந்த அழகான மைதானமாக கருதப்படும் தர்மசாலாவில் வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக பங்கு பெற உள்ள இரு அணி வீரர்களும் மார்ச் மூன்றாம் தேதி தர்மசாலா சென்று அடைகின்றனர்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது ரஞ்சி போட்டியில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை.
விராட் கோலி இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. அவர் மார்ச் 10ஆம் தேதி தான் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று கே எல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என தெரிகிறது 100% உடல் தகுதியை எட்டுவதற்காக கே எல் ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் கே எல் ராகுல் அணிக்கு திரும்புவது சிரமமாகும். இந்த நிலையில் இந்திய அணியின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. கே எல் ராகுல் களமிறங்கவில்லை.
இதனால் இந்த தொடரில் அறிமுகமாகி தொடர்ந்து சொதப்பி வரும் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ரஜத் பட்டிதார் தொடர்ந்து சொதப்பி வருவதால் கூடுதலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள தேவ்தத் படிக்கல்லுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.