மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக பலரும் விராட் கோலியை சொல்வார்கள். இன்னும் சிலர் தோனியையும், கங்குலியையும் பாராட்டுவார்கள். ஆனால் ரோகித் சர்மா என்ற கேப்டன் சத்தமே இல்லாமல் பல சாதனைகளைப் படைத்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் விராட் கோலி கே எல் ராகுல் போன்ற பல சீனியர் வீரர்கள் இல்லை. இந்த நிலையில் இளம் வீரர்களை வைத்து ரோகித் சர்மா தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்று இருப்பது குறித்து அவர் பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா என்ற ஒரு கேப்டனை நாம் அதிகம் கண்டு கொள்வதில்லை. இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று ஒரு மாற்றம் தற்போது நிகழ்ந்து இருக்கிறது. இதுபோன்ற இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியை பெற்றிருக்கிறார்.
ரோகித் சர்மா என்ற பேட்ஸ்மேனை தான் நாம் பாராட்டுகிறோமே தவிர அவருடைய கேப்டன்சியை பாராட்டாமல் கடந்து விடுகிறோம். அமைதியாக இருந்து பல அதிரடி காரியங்களை அவர் சாதித்து இருக்கிறார். ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் செய்வதுதான் நமக்கு தெரிகிறது. ஆனால் இவர் வித்தியாசமாக செயல்படுகிறார். அணியில் ஏற்பட்ட மாற்றங்களை ரோகித் சர்மா சிறப்பாக கையாண்டார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு அவர் அணியை மீட்டு வந்து வெற்றி பெற வைத்தது பாராட்டத்தக்கது. குறிப்பாக இந்திய அணி கடும் நெருக்கடியில் சிக்கிய போது சதம் அடித்து அணியை காப்பாற்றினார். இதன் மூலம் தான் வெறும் அலங்கார கேப்டன் கிடையாது என்பதை ரோகித் சர்மா நிரூபித்திருக்கிறார். ரோகித் சர்மாவின் தலைமை பண்பு இந்திய அணியை சரியான பாதையில் பயணிக்க வைக்கிறது.
இந்தத் தொடரில் மட்டும் கேப்டன்சி பொய்த்துப் போய் இருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கும். அதுவும் பும்ரா, ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களும் மற்ற இளம் வீரர்களும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இதுபோன்று செயல்பட கேப்டனின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமாகும்.
அந்த வகையில் அனுபவம் இல்லாத அணிக்கு, ரோகித் சர்மா கேப்டனாக நம்பிக்கை கொடுத்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இல்லாத சமயத்தில் குல்தீப் யாதவை பயன்படுத்தியது ரோகித் சர்மாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக நான் பார்க்கின்றேன். அஸ்வின் இல்லாத போது மிகப்பெரிய அழிவை நோக்கி இந்தியா செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போது ரோகித் சர்மா அதனை தன்னுடைய புத்தி கூர்மையால் தலைகீழாக மாற்றி விட்டார். முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா சிறப்பாக கணக்கிட்டு தேவையான மாற்றங்களை செய்து அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் என்று இயன் சாப்பல் பாராட்டியுள்ளார்.