IND VS ENG : இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.குளிர் பிரதேசம் என்பதால் இந்த சூழலுக்கு தங்களை மாற்றிக் கொள்ள எதுவாக இந்திய அணி வீரர்கள் கடந்த நான்கு நாட்களாக தர்மசாலாவில் முகாமிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை தர்மசாலா டெஸ்டிலும் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. நான்காவது டெஸ்ட்டில் களமிறங்கிய பேட்ஸ்மேன்களை ஐந்தாவது டெஸ்ட்டில் விளையாடுவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது.

இந்த சூழலில் பயிற்சி முகாமில் இளம் வீரர் சர்பராஸ்கான் மீது ரோகித் சர்மா தனி கவனம் செலுத்தி இருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி ஒரு கட்டத்தில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெயரை பெற்றிருந்தார். அதேபோன்று தாம் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 62 மற்றும் 68 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றிருந்தாலும் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்தார்.
இந்த நிலையில் ரோஹித் சர்மா தனிக் கவனம் செலுத்தி தன்னுடைய பேட்டிங் யுத்திகளை பகிர்ந்து கொண்டார். வேகப்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். சுழற் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா சர்பராஸ் கானுக்கு தனியாக பாடம் எடுத்தார். இதன் மூலம் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா எவ்வாறு துணையாக இருக்கிறார் என்பது இந்த காட்சி காட்டுவதாக அவர்கள் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணியில் இடம் பிடிக்க பல காலம் செலவிட்ட சர்பராஸ் கானுக்கு தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் கிடைத்த வரவேற்பு சிலர் கண்களை உறுத்தி இருக்கிறது. இதனால் அவர் எப்போது சொதப்புவார் எப்போது அவரை விமர்சிக்கலாம் என பல பேரும் காத்திருக்கிறார்கள். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களே சர்பராஸ் கானை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்கள்.
இதனால் சர்பராஸ் மனதளவில் கடும் நெருக்கடிக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது. இதனை புரிந்து கொண்டுள்ள ரோஹித் சர்மா சர்பராஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை மட்டும் அழைத்து பயிற்சி முகாமில் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். ஐந்தாவது டெஸ்டிலும் கோலி, ராகுல் போன்ற வீரர்கள் இல்லாததால் சர்பராஸ் கான், ரஜத் பட்டிதார், ஜூரல்,ஜெய்ஸ்வால் ,கில் ஆகியோரை நம்பி தான் இந்திய அணி இருக்கிறது.