Rohit sharma : இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்களும் தர்மசாலாவில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த தொடரில் ஜெய்ஸ்வால் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.
இரண்டு இரட்டை சதம், அதிரடி ஆட்டம் என அவர் பட்டையை கிளப்புகிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அதிரடியாக ஆடுவது தங்களை பார்த்து தான் என்றும், இதற்கான பெருமைகளை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பென் டக்கட் கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். ஜெய்ஸ்வால் அவருடைய திறமையை வைத்து விளையாடுவதாகவும் இங்கிலாந்து வீரர்கள் பேசும்போது யோசித்துப் பேச வேண்டும் என நாசர் உசேன் உள்ளிட்டோர் இதற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்கள்.
இந்த நிலையில் இது குறித்து ரோகித் சர்மாவிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, நான் சத்தியமாக சொல்கிறேன். பேஸ்பால் என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. இந்த டெஸ்ட் தொடரில் கூட யாருமே கண்ணை மூடிக்கொண்டு காட்டுத்தனமாக பேட்டை சுற்றவில்லை. கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இங்கிலாந்து அணி இம்முறை நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
இப்படி இருக்கும் போது பேஸ் பால் என்றால் என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெண் டக்கட்டை பார்த்து ஜெய்ஸ்வால் கற்றுக் கொள்கிறாரா. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒரு வீரர் இருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவார் என்று பென் டக்கட் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் என்று ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய பயிற்சி முகாமில் ஜெய்ஸ்வால், ரஜட் பட்டிதார், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் மற்றும் அஸ்வின் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள்.
ரஜட் பட்டிதார் பயிற்சி முகாமுக்கு வந்திருப்பதன் மூலம் அவர்தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார் என்று தெரிகிறது. மேலும் தர்மசாலா குளிர்பிரதேசம் என்பதால் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடப்படலாம் என்றும் தெரிகிறது. பயிற்சி முகாமில் சிராஜ் பங்கேற்காததால் பும்ரா, முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் பிளேயிங் லெவனனில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.