மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை பல ஜாம்பவான் வீரர்கள் உருவெடுத்திருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பிறந்து வளர்ந்தவர்கள் என பாராட்டும் அளவுக்கு டெஸ்ட் போட்டிகளே கதி என்று பல ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள்.அந்த வகையில் சேர்ந்தவர்தான் இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மன்.
ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு இன்னும் இந்திய அணி நடு வரிசையில் மாற்றுவீரரை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் விவிஎஸ் லட்சுமணன் போலவே ஆந்திராவில் பிறந்து வளர்ந்த ஹனுமா விகாரி என்ற வீரர் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பெயர் வாங்கினார்.

இந்திய அணியிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 839 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடங்கும். சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஹனுமா விகாரி 161 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 23 ரன்கள் சேர்த்து காப்பாற்றினார். ஆனால் தற்போது ஹனுமா விகாரியை இந்திய அணியில் சேர்க்கப்படவே இல்லை.
அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. இந்த நிலையில் நடப்பு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விகாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 7 இன்னிங்ஸில் மொத்தமாக அவர் 365 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடைய சராசரியும் 50க்கும் மேல் இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய நிலை குறித்து பேசிய ஹனுமா விகாரி இந்திய டெஸ்ட் அணியில் தாம் இல்லாதது எனக்கு மிகவும் ஏமாற்றமும் சோகமாகவும் இருக்கிறது.
அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் உச்சத்திற்கும் சரிவுக்கும் செல்கிறார்கள். தற்போது என்னுடைய ஒரே பணி ரஞ்சி கிரிக்கெட்டில் நன்றாக ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும். இந்த சீசனில் நான் நல்ல தொடக்கத்தை அளித்திருக்கிறேன். அணிக்காகவும் சரி எனக்காகவும் சரி நான் நன்றாக ஆடி வருகிறேன். இன்னும் எஞ்சிய போட்டிகளிலும் நான் நிறைய ரன்களை குவித்து அணிக்கு திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது.
இதுவரை என்னை யாரும் தொடர்பு கொண்டு பேசவே இல்லை. என்னுடைய கடைசி டெஸ்ட்க்கு பிறகு பயிற்சியாளர் டிராவிட் மட்டும் என்னிடம் பேசினார். நான் எதில் கவனம் செலுத்த வேண்டும். எதில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தார். ஆனால் அதன் பிறகு இதுவரை என்னிடம் யாருமே பேசவில்லை. ஆனால் இது குறித்து எல்லாம் நான் கவலைப்படவில்லை.
என்னுடைய குறிக்கோள் எல்லாம் என்னுடைய ஆட்டத்தை நான் எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது குறித்து தான் யோசித்து வருகிறேன். தற்போது ரன் சேர்க்கும்போது நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் விளையாடும் போது அந்த மகிழ்ச்சி இல்லை என்றால் நான் விளையாடவே தேவையில்லை. ஆடுகளத்திற்கு நான் செல்லும்போது என் அணிக்காக தான் நான் விளையாட வேண்டும். தற்போது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்னை எந்த இடத்தில் விளையாட சொல்கிறார்களோ, பேட்டிங் வரிசையில் அந்த இடத்தில் விளையாடி ரன்கள் சேர்ப்பேன் என்று ஹனுமா விகாரி கூறியுள்ளார்.