ஐதராபாத்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதியான நாளை ஹைதராபாத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி பேஸ்பால் என்ற அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் யுக்தியுடன் முதல் முறையாக இந்தியாவை எதிர்கொள்கிறது. இதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி இந்தியாவில் வேலைக்கு ஆகாது என்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இங்கிலாந்து வீரர்கள் பேஸ்பால் யுக்தியை இந்திய ஆடுகளத்தில் வெளிப்படுத்தினால் போட்டி இரண்டே நாட்களுக்குள் முடிந்து விடும்.
ஏனென்றால் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியாது. ஏதாவது ஒரு பந்து திரும்பும், இல்லை சில பந்து நேராக ஸ்டெம்பை குறி வைத்து வரும். எனவே இதனை கணித்து அதிரடியாக இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். இதையும் மீறி அவர்கள் அதிரடியாக விளையாடினால் அது நிச்சயம் எங்களுக்கு தான் நல்லதாக அமையும்.
ஏனென்றால் போட்டி மிக விரைவாக முடிந்துவிடும். கடந்த முறை பல வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வந்தபோது போட்டிகள் விரைவாக முடிவடைந்து விடுகிறது. 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்தியா வந்து விளையாடிய போது நான் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினேன். நான் வீசிய ஐந்து ஓவர்களில் ஜோ ரூட் மற்றும் பாரிஸ்டோ ஆகியோரின் விக்கெட்டுகளை நான் விரைவாக வீழ்த்தினேன்.
எனவே இம்முறையும் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்வேன். பேட்ஸ்மேன்கள் மத்தியில் நெருக்கடியை ஒரு முனையில் இருந்து நான் ஏற்படுத்த முயற்சி செய்வேன் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.