Shreyas Iyer : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்திருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு வீரர்களின் பீல்டிங்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய ஆலி போப்பின் விக்கெட்டை ரோகித் சர்மா அபாரமான கேட்சாக பிடித்து அசத்தினார்.

இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் எப்போதுமே அதிரடியாக விளையாடி தனி ஆளாக நின்று ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் வெற்றிக்கு 179 ரன்கள் தேவைப்பட இந்தியாவின் வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தது. ஸ்டோக்ஸ் அப்போது 11 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்டோக்ஸ் மட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு 100 ரன்கள் சேர்த்து இருந்தாலே, அது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆப்பாக அமைந்திருக்கும். ஆனால் அந்த நிலையில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக பீல்டிங் செய்து பென் ஸ்டோக்சை ரன் அவுட் ஆக்கினார். ஸ்ரேயாஸ் முதல் இன்னிங்ஸில் ஒரு ஷாட்டை தூக்கி அடித்து பவுலருக்கு விரட்ட முயன்ற போது பென் ஸ்டோக்ஸ் ஓடி சென்று அபார கேட்ச் பிடித்தார்.
ஆனால் அந்த கேட்சை பிடித்து விட்டு ஒரு விரலை மட்டும் உயர்த்துக் காட்டி ரசிகர்களை வெறுப்பேற்றினார். மேலும் தகாத முறையில் வார்த்தைகளை சொல்லி ஸ்ரேயாஸ் விக்கெட்டை கொண்டாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பென் ஸ்டோக்சை ரன் அவுட் செய்த ஸ்ரேயாஸ், அதேபோல் ஒரு விரலை உயர்த்தி காட்டி சூப்பராக பழி வாங்கினார்.
இதை அடுத்து தான் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் தகாத முறையில் நடந்து கொண்ட பென் ஸ்டோக்ஸுக்கு அதேபோல் கைவிரலை உயர்த்தி காட்டி ஸ்ரேயாஸ் ரிட்டன் கிப்ட் கொடுத்து விட்டதாகவும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள முரளி கார்த்திக், டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில ஆட்டங்களாக தடுமாறுகிறார். தற்போது இந்த பீல்டிங்கின் மூலம் அவர் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய பங்காற்றி இருக்கிறார். இது அவருடைய பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.