Shubman Gill : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து முடிவடைந்து இருக்கிறது. இதில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் கில் சதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார்.
கடந்த 12 இன்னிங்ஸ்களுக்கு மேலாக கில் ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை. இதனால் தன்னுடைய இடத்தை இழக்கும் அபாயம் கில்லுக்கு இருந்தது. எனினும் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் அடித்து அவர் அசத்தினார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சுப்மன் கில், தான் சதம் அடித்தும் தனது தந்தை என்னை திட்டியதாக கூறினார். இது குறித்து பேசிய அவர், நான் முதல் இன்னிங்சில் பீல்டிங் செய்யும் போது குல்தீப் வீசிய ஓவரில் ஒரு கேட்ச் பிடித்தேன். அது சுலபமான கேட்ச் தான். எனினும் பந்து என் கைவிரல்களை தாக்கி ரத்தம் வந்தது. இதனால் கொஞ்சம் வலி இருந்தது.
எனினும் பேட்டிங் செய்வதற்காக வலி நிவாரண ஊசியை போட்டுக் கொண்டு அதன் பிறகு தான் பேட்டிங் செய்ய வந்தேன். கடந்த சில போட்டிகளாக நான் சரியாக விளையாடவில்லை. இதனால் எனக்கு கடும் நெருக்கடி இருந்தது. எனினும் இன்றைய போட்டியில் நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நான் நானாக இருந்து விளையாட வேண்டும் என்று களத்தில் நின்றேன்.
நான் முதல் பந்தை பிடித்ததில் இருந்து கடைசி பந்தில் ஆட்டம் இழக்கும் வரை என்னுடைய இதயத்துடிப்பு ஒரே மாதிரி தான் இருந்தது. பேட்டிங் செய்யும்போது பெரிய நுணுக்கங்கள், பேட்டிங் யுத்தியில் மாற்றம் எதையுமே நான் செய்யவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தினேன்.
நான் 104 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதும். என்னுடைய தந்தை என்னிடம் போன் செய்து என்னை திட்டினார். பெரிய ஒரு சதத்தை அடிக்காமல் வெறும் 104 ரன்கள் ஆட்டம் இழந்து விட்டாய் என்று என்னை திட்டினார். நான் உண்மைதான் அப்பா தவற விட்டு விட்டேன் என்று கூறினேன். நல்லவேளை இன்று என்னை ஹோட்டலில் விட்டு வெளியே வர என் தந்தை அனுமதித்தார் என்று கூறி சிரித்தார்.
மேலும் இந்திய அணிக்காக ஆடுவது தமக்கு கிடைத்த பரிசு என்றும் நான் சரியாக விளையாடவில்லை என்றால் பேப்பர், சமூக வலைத்தளம் என எதையுமே பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். நான் சரியாக விளையாடவில்லை என்று எனக்கே தெரியும். அதை நீங்கள் சொல்லி தான் நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று விமர்சகர்களை சாடிய கில், தன் மீது நம்பிக்கை வைத்து தமக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பீட்டர்சன்னுக்கு கை கொடுத்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.