மும்பை : அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
அயர்லாந்து தொடரிலாவது வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடர் முற்றிலும் வித்தியாசமானவாயாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணியில் இரண்டாம் தர வரிசை வீரர்கள் கூட இந்த பிளேயிங் லெவனனில் இருக்க மாட்டார்கள்.

முற்றிலும் அனுபவம் குறைந்த இளம் நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியே பும்ரா தலைமையில் இந்த தொடரில் களமிறங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். கில், இஷான் கிஷன் ஆகியோர் இந்த தொடரில் இல்லாததால் சிஎஸ்கே அணியின் அனுபவ வீரர் ருதுராஜ் மற்றும் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்க கூடும்.
மூன்றாவது வீரராக திலக் வர்மாவும் நான்காவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று நடு வரிசையில் ஐந்தாவது இடத்தில் சிவம் துபே ஆல் ரவுண்டராக இடம்பெற வாய்ப்பு உள்ளது. இவர் இந்திய அணிக்கு மூன்று ஆண்டுகள் கழித்து திரும்பி இருக்கிறார்.அதேபோன்று ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 6வது வீரராக விளையாட வாய்ப்பு இருக்கிறது.
ஏழாவது வீரராக தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற உள்ளார். இதனைத் தொடர்ந்து 8வது வீரராக பும்ராவும், 9வது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கும் 10வது வீரராக பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் 11வது வீரராக விளையாடுகிறார்.
இந்த தொடரில் சிவம் துபே வெறும் பேட்ஸ்மேனாக இறங்கினால் இந்திய அணி மூன்று ஸ்பெஷல் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும். சிவம் துபே ஓவர் வீச நேர்ந்தால் ஏதேனும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக கூடுதலாக சபாஷ் அஹமத் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்தத் தொடரில் பும்ராவின் கேப்டன்சி எப்படி இருக்கும் அவர் காயத்தில் இருந்து திரும்பி எப்படி விளையாட உள்ளார் என்பதை பார்க்க வேண்டிய ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.