மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 ஒருநாள் தொடர்களில் இடம் பெறாத சீனியர் வீரர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர்.
விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தற்போது தான் இந்திய அணிக்காக விளையாடுகிறார்கள். இதனால் இவ்விரு வீரர்களையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோன்று பும்ரா, சிராஜ்,கே எல் ராகுல், கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களும் அணியில் இருப்பதால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் வீழ்த்த முடியும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் டோனால்ட், விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இதுதான் கடைசி தென்னாப்பிரிக்கா தொடராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இந்த இரண்டு வீரர்களுமே நல்ல உத்வேகத்துடன் தென்னாப்பிரிக்கா மண்ணில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். எனக்கு விராட் கோலியை பற்றி நன்றாக தெரியும். அவருடைய மூளை எப்படி செயல்படும் என்றும் எனக்கு தெரியும். ஏனென்றால் நான் ஆர் சி பி அணியில் விராட் கோலியுடன் அதிக நேரம் செலவழித்திருக்கிறேன்.
இதனால் தென்னாப்பிரிக்காவை நோக்கி அவர் சீறி பாய்ந்து வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இது என்னுடைய கடைசி தென்னாபிரிக்க தொடராக இருந்தால் நான் நிச்சயமாக சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் நினைப்பேன். அது தென்னாப்பிரிக்காவுக்கு ஆபத்தை கொடுக்கும். இதுதான் கடைசி தொடர் என்ற உத்வேகம் இருவருக்குமே இருக்கும்.
நிச்சயமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய ரசிகர்களின் ஆதரவு இந்த இரண்டு வீரர்களுக்குமே இருக்கும். மேலும் இந்த இரண்டு வீரர்களும் தென்னாப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். இந்த டெஸ்ட் தொடர் நல்ல பொழுதுபோக்கை கொடுக்கும். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக இருக்கிறார்கள். எனவே நிச்சயம் தென்னாப்பிரிக்காவை நோக்கி அவர்கள் வருவார்கள். அதை மனதில் வைத்து தான் இருவருமே பயிற்சி செய்து வருகிறார்கள் என்று ஆலன் டோனால்ட் கூறியுள்ளார்.