மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட இந்தியா வெல்லவில்லை. இதனால் இம்முறையாவது இந்திய அணி ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்குமா என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கௌதம் கம்பீர் இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு தான் என்பது போல் பேசி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த தொடரில் ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் மிகப்பெரிய அளவில் நெருக்கடி இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் என அனைத்துமே இருக்கும். 2011 ஆம் ஆண்டு இருந்த பேட்டிங் தற்போது தென்னாப்பிரிக்க அணியில் இல்லை. பவுலர்களும் புதிய வீரர்களாக தான் இருக்கிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஷமி இல்லாதது நிச்சயம் பெறும் பின்னடைவு தான். முஹம்மது சிராஜும் இளம் வீரராக இருக்கிறார். இதனால் இம்முறை இந்திய அணியின் பவுலிங்கும் பல சவாலுக்கு உள்ளாக்கப்படும் என நினைக்கிறேன் என்று கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் இசான் கிஷன் தற்போது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி இருப்பதால் கே எல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக இருப்பார் என தெரிகிறது. இதேபோன்று பந்துவீச்சில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா தங்களுடைய இடத்தை உறுதி செய்து கொள்வார்கள். ஆனால் மூன்றாவது பவுலர் பிரசித் கிருஷ்ணாவா இல்லை முகேஷ் குமாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களை பயன்படுத்துமா இல்லையெனில் சர்துல் தாகூர் என ஆல் ரவுண்டரை பயன்படுத்துமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.