லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் மட்டும் இல்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதாக வீழ்த்தி விடும் எனவும், இனிவரும் காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் சரியாக இருக்காது எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. அதே சமயம், ஐசிசி நடத்தும் உலக அளவிலான கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதி வருகின்றன. இன்னும் ஆறு மாதங்களில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2 - 0 என தோல்வி அடைந்திருந்தது. இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது.
அது குறித்து தன்வீர் அஹமத் பேசிய போது, "முன்னாள் இந்திய வீரர்கள் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என முதலில் பார்த்துவிட்டு, அதன் பிறகு பாகிஸ்தான் குறித்து பேசலாம். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான், இந்தியாவை மிக எளிதாக வீழ்த்தி விடும்." என்றார்.
ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஈகோ.. பொறுப்புக்கு வந்தபோது பீதியுடன் இருந்தேன்.. ராகுல் டிராவிட்!
மேலும், "இந்திய அணி அவர்கள் சொந்த மண்ணில் தட்டையான பிட்ச்களில் எளிதாக ரன் குவிப்பார்கள். ஆனால், பந்து திரும்பும் பிட்ச்களில், ஸ்விங் ஆகும் பிட்ச்களில் இந்திய அணியின் பேட்டிங் சரியாக இருக்காது. இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் அதிக ரன் சேர்த்து இருக்கலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியிலும் அவர்கள் இன்னும் கூட அதிக ரன்கள் எடுத்திருக்கலாம். எதிர்காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு என்ன ஆகும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்திய அணியின் பவுலிங் வரிசை கூட நன்றாக இருக்கும். ஆனால், பேட்டிங் வரிசை தடுமாற்றத்தை சந்திக்கும். இந்திய அணியில் இருக்கக்கூடிய புதிய பேட்ஸ்மேன்கள், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அமைத்துக் கொடுத்த பாதையில் அணியை கொண்டு செல்ல மாட்டார்கள்." இவ்வாறு தன்வீர் அஹமத் பேசி இருக்கிறார்.