கலிஃபோர்னியா: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனக்கு "ஹிட்மேன்" என்ற பெயர் எப்போது வந்தது, எப்படி வந்தது என்ற காரணங்களை பற்றி முதல்முறையாக பேசி இருக்கிறார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரிலேயே இந்திய அணிக்காக அறிமுகமானாலும், 2013ஆம் ஆண்டு வரை ரோகித் சர்மா இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். 2013ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷிகர் தவான் - ரோகித் சர்மா இணையை தொடக்க வீரர்களாக களமிறக்கியது.

அன்று முதல் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இருப்பினும் சேவாக், கம்பீர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் விளையாடிய இடம் என்பதால், ரோகித் சர்மா தொடக்க வீரருக்கு சரியான ஆள் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் வைத்து ரோகித் சர்மா மாஸ் சம்பவத்தை அரங்கேற்றினார்.
சச்சின் டெண்டுல்கர், சேவாக்கிற்கு பின் ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அதன்பின் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராகவும் இரட்டை சதத்தை விளாசி மிரட்டினார். இதனால் ரோகித் சர்மாவை இந்திய அணியில் இருந்து நீக்குவதை பற்றி யாரும் சிந்திக்க கூட இல்லை. இதனிடையே "லிட்டில் மாஸ்டர்" சச்சின், "கிங்" கோலி, "தல" தோனி என்பது போல் ரோகித் சர்மாவுக்கு "ஹிட்மேன்" என்ற அடைமொழி அளிக்கப்பட்டது.

இந்த அடைமொழியை யார் வழங்கினார்கள், எப்போது முதல் ரோகித் சர்மா "ஹிட்மேன்" என்று அழைக்கப்பட்டு வருகிறார் என்பதை ரசிகர்களால் கண்டறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில், "ஹிட்மேன்" பெயர் காரணம் குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ரோகித் சர்மா பேசுகையில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான் எனது முதல் இரட்டை சதத்தை விளாசினேன். அந்தப் போட்டியில் மொத்தமாக 16 சிக்சர்களை விளாசி இருந்தேன். அதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தேன். அந்தப் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில், ஒருவர் என்னை பார்த்து, "You are a Hitman" என்று கூறினார். அதன்பின் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி, "The Hitman" என்று என்னை புகழ்ந்தார். அன்று முதல் ஹிட்மேன் என்ற பெயர் என் பெயருடன் ஒட்டிக் கொண்டது என்று கூறியுள்ளார்.