புது டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யக் கூடாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சஞ்சு சாம்சன் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி, இம்முறையும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக யாரைக் களமிறக்குவது என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரில் யாரைத் தேர்வு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். "சஞ்சு சாம்சனுக்காக நாம் வருத்தப்படலாம். ஆனால் நிஜம் என்னவென்றால், அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்துவிட்டார். இந்திய அணி நிர்வாகம் அவருக்குப் போதுமான ஆதரவை அளித்தது. ஆனால் அவர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை" என்று ஆகாஷ் சோப்ரா சஞ்சு சாம்சன் முகத்தில் அடித்தாற்போல தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
" அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் தான் ஜோடி சேர வேண்டும். இது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட ஒன்று. இஷான் கிஷன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இதில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சஞ்சு சாம்சன் என்றோ ஒரு நாள் நன்றாக ஆடுவார் என்று காத்திருப்பதை விட, தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனைத் தேர்வு செய்வதே சிறந்தது. எனக்குத் தனிப்பட்ட வீரர்களை விட இந்திய அணி தான் முக்கியம். இந்தியாவுக்காக விளையாடும்போது, நல்ல நிலையில் உள்ள வீரர்கள் தான் களத்தில் இருக்க வேண்டும்" என்று விளக்கமளித்தார்.
சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.
அந்தத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷன், ஒரு சதம் உட்பட 215 ரன்களைக் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 230க்கு மேல் இருந்தது. சராசரி 53.75 ஆகும். ஆனால், 5 போட்டிகளிலும் விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி வெறும் 9.20 மட்டுமே. இந்த மோசமான ஆட்டமே உலகக்கோப்பைக்கான அணியில் அவரது இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி தென்னாப்பிரிக்கா உடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்கவில்லை என்றால் அவரது வெளியேற்றம் உறுதியாகி விடும்.