மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது வரும் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை தற்காலிக தேர்வு குழு தலைவர் சிவ்சுந்தர் அறிவித்துள்ளார். இதில் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரோகித் சர்மாவின் தவறான கொள்கையே காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரோகித் சர்மாவையே கேப்டனாக பிசிசிஐ தேர்வு குழு நியமித்துள்ளது.

இதேபோன்று துணை கேப்டனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் அடுத்த கேப்டன் பந்தயத்தில் ரஹானே முதன்மையான ஆளாக இருக்கிறார். இதே போன்று தொடக்க வீரர் சுப்மன் கில், சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் இசான் கிஷன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதே போன்று சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின், ஜடேஜா, அக்சர்பட்டேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் வேகபந்துவீச்சாளராக முகமது சிராஜ், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய முகேஷ் குமார், ஜெயதேவ் உனாட்கட், நவதீப் ஷைனி ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விளையாடி வரும் முகமது சமிக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று ஹனுமா விகாரி, சஞ்சு சாம்சன், சப்ராஸ்கான் ஆகியோருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.