மும்பையோ, புனேயோ.. கடைசியில் ஜெயிச்சது மகாராஷ்டிராதானே!
மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டியில் புனே அணி தோற்று, மும்பை அணி ஜெயித்திருந்தாலும் கூட வெற்றி என்னவோ மகாராஷ்டிராவுக்கே என்பது அந்த மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நொடியில் வெற்றியைத் தட்டிச் சென்று மிரட்டி விட்டது. கடைசி நேரத்தில் புனே வீரர்கள் சொதப்பியதாலும், ஆரம்பத்திலேயே சுதாரிக்காமல் ஆடியதாலும் எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியைத் தவற விட்டனர்.
கடைசியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று 3வது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்த நிலையில் புனே தோற்றாலும் கூட மகாராஷ்டிர ரசிகர்கள் ஜாலியாகவே உள்ளனர். காரணம், வென்ற மும்பையும் மகாராஷ்டிரா என்பதால்.

மகாராஷ்டிராவில் உற்சாகம்
மும்பையும், புனேவும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நகரங்கள் என்பதால் இந்த மாநில ரசிகர்கள் யார் ஜெயித்தாலும் சந்தோஷம்தான் என்ற மன நிலையில்தான் இருந்தனர்.

இந்திய கேப்டனுக்கே வெற்றி
இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் வெல்ல வேண்டும் என்றே பலரும் நினைத்தனர். காரணம், புனே அணியின் கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித். அதேசமயம், மும்பை கேப்டனாக இருந்தவர் இந்தியாவின் ரோஹித் சர்மா. எனவே இந்தியரைக் கேப்டனாக கொண்ட மும்பை வெல்ல வேண்டும் என்றே பலரும் நினைத்தனர்.

டோணிக்காக புனேவுக்கு ஆதரவு
அதேசமயம், புனே அணியில் டோணி இருந்ததால் புனேதான் வெல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் ஏராளம். டோணி ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பிலும் இருந்தனர். பாகுபலி ரேஞ்சுக்கு டோணியை மீம்ஸ் கிரியேட்டர்கள் தூக்கி வைத்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது.

சொதப்பிய டோணி
ஆனால் கடைசியில் டோணி சொதப்பி விட்டார். நேற்று அவரது பங்களிப்பு மிக மிக குறைவாகவே இருந்தது. மறு முனையில் ஸ்டீவ் ஸ்மித் உறுதியுடன் போராடிப் பார்த்தார். ஆனால் முடியவில்லை. கடைசி நேரத்தில் மும்பை அழகாக வெற்றி பெற்று விட்டது.

மகாராஷ்டிராவுக்கே வெற்றி
இதனால் மும்பை ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். அதேசமயம், தோல்வி அடைந்தாலும் கூட நம்ம மாநிலத்தின் மும்பை வென்றதே. அதுவே மகிழ்ச்சிதான் என்று புனே ரசிகர்களும் தங்களைத் தேற்றிக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications