மும்பை: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ஹைதரபாத் அணியும் விளையாடின. இதில் டாசில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஷிகர் தவான் (48), வார்னர் (49) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் வந்த ஹூடா 9 ரன்னில் நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 5 ரன்னில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய பென் கட்டிங் (20) ஓரளவு கைகொடுத்தார். இதனை அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் (1) மலிங்காவிடம் சரணடைந்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் ரன்வேகம் குறைந்தது. கடைசி நேரத்தில் பின் வரிசை வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் அந்த அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ராணா 36 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 20 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதன் மூலம் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.