மும்பை: மும்பைக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
முன்னதாக டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. டாசில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், மாற்றமின்றி அப்படியே களமிறங்கியது. இப்போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயத்திலிருந்த பஞ்சாப் அணி, ஸ்வப்னில் சிங்கிற்கு பதிலாக இஷாந்த் ஷர்மாவை அணியில் சேர்த்தது.
முதலில் பேட் செய்த பஞ்சாப், அதிரடியாக ரன் குவித்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை அந்த அணி குவித்தது. அதிகபட்சமாக விருதிமான் சாஹா 93, மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தனர்.
231 என்ற பெரிய இலக்கை விரட்டிய மும்பை, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. சிமென்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பொல்லார்ட் 50 ரன்களுடன் களத்தில் நின்றார். கடைசி ஓவரில் பல பந்துகளை பொல்லார்ட் வீண் செய்தது மும்பையை தோல்வியில் தள்ளியது.
இந்த வெற்றியால் பஞ்சாப் தனது பிளேஆப் சுற்று வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது. அடுத்த போட்டியிலும் அந்த அணி வெல்ல வேண்டியது கட்டாயம்.