வெற்றி
மும்பை அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், அந்த அணிக்கு மகிழ்ச்சி தர கூடிய விஷயங்கள் நிறைய இதில் நடந்தது. அதன்படி நேற்று போட்டியில் பாண்டியா பார்மிற்கு திரும்பினார். பாண்டியா காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மீண்டு வந்தவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை, பவுலிங்கும் போடவில்லை.
பேட்டிங்
இதனால் பாண்டியா பழைய பாண்டியாவாக இருக்கிறாரா என்று கேள்வி எழுந்தது. இவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று போட்டியில் பார்மிற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா, அதிரடியாக ஆடி 21 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ் , இரண்டு பவுண்டரி அடக்கம். தொடக்கத்தில் மெதுவாக ஆடி, கடைசியில் பாண்டியா அதிரடி காட்டினார் .
அரை சதம்
அப்போதுதான் பாண்டியா செய்த அந்த செயல் மைதானத்தை அதிர வைத்தது. அரை சதம் அடித்த பாண்டியா எப்போதும் போல பேட்டை உயர்த்தி காட்டாமல், முட்டி போட்டு கையை உயர்த்தினார். அமெரிக்காவில் போலீசார் மூலம் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட பின் உலகம் முழுக்க தற்போது #BlackLivesMatter எனப்படும் கருப்பின மக்களுக்கு ஆதரவான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
கறுப்பின மக்கள்
கறுப்பின மக்களுக்கு எதிரான அராஜகத்தை எதிர்க்கும் வகையில் இந்த பிரச்சாரம் செய்யப்படும். உலகம் முழுக்க பல்வேறு விளையாட்டு போட்டிகளில் #BlackLivesMatter பிரச்சாரத்தை ஆதரிக்கும் வகையில் வீரர்கள் போட்டிக்கு முன்பாகவோ, பின்பாகவோ கீழே முட்டி போட்டு கையை உயர்த்துவார்கள். உலகம் முழுக்க பல போட்டிகளில் #BlackLivesMatter பிரச்சாரம் செய்யப்பட்ட போது ஐபிஎல் போட்டியில் அதை யாரும் முன்னெடுக்கவில்லை.
செம
மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஹோல்டர் போன்றவர்கள் இதை குறிப்பிட்டு வருத்தப்பட்டு இருந்தனர். #BlackLivesMatter பற்றி ஐபிஎல் தொடரில் யாருமே பேசவில்லை என்று கூறினார். ஆனால் தற்போது எந்த வீரரும் இதை பற்றி பேசாத போது பாண்டியா துணிச்சலாக நேற்று முட்டி போட்டு #BlackLivesMatter பிரச்சாரத்தை ஆதரித்து உள்ளார்.
பொல்லார்ட்
பாண்டியாவின் செயலை பார்த்து நேற்று மைதானமே ஆடிப்போனது. நேற்று #BlackLivesMatter பிரச்சாரத்தை ஆதரித்து பாண்டியா முட்டி போட்டது பொல்லார்டை பெரிய அளவில் கவர்ந்தது . பொல்லார்ட் இதை பார்த்து ஆடிப்போய் கைதட்டி பாராட்டினார். பாண்டியாவின் செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.