
முதல் தகுதிச் சுற்றுப் போட்டி
முதல் தகுதிச் சுற்றுப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அஸ்வின் வந்தார்
அந்த அணிக்கு க்விண்டன் டி காக் - ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர். டி காக் முதல் ஓவரை சந்தித்தார். அடுத்த இரண்டாவது ஓவரில் இடது கை ஆட்டக்காரர் டி காக் விக்கெட்டை வீழ்த்த அஸ்வினை பந்து வீச அழைத்தார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.

டி காக்
இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த டி காக் ஒரு ரன் எடுத்து எதிர் முனைக்கு சென்றார். ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் தன் முதல் பந்தை சந்திக்க தயார் ஆனார். அஸ்வின் வழக்கம் போல சுழற் பந்து வீச முயலாமல் நேராக பந்தை வீசினார்.

திசை மாறிய பந்து
பந்து ஆஃப் சைடு வருவதாக நினைத்து ரோஹித் சர்மா பந்தை தடுக்க முன்னே வந்தார். ஃபிரண்ட்-புட் டிபன்ஸ் ஆட முயன்றார். ஆனால், பந்து பிட்ச் ஆகி திசை மாறி நேராக சென்று ரோஹித் சர்மாவின் காலில் பட்டது. உடனே எல்பிடபுள்யூ அவுட் கேட்டார் அஸ்வின்.

அமைதியாக சென்ற ரோஹித்
அம்பயர் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவுட் கொடுத்தார். அந்த அளவுக்கு பந்து நேராக சென்றது. அனைவரும் ரோஹித் சர்மா டிஆர்எஸ் கேட்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இது அவுட் தான் என தெரிந்து அமைதியாக வெளியேறினார்.

பெரிய ஏமாற்றம்
ரோஹித் சர்மா ஆட்டமிழந்த உடன் முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது. காயம் காரணமாக லீக் சுற்றில் பல போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடவில்லை, முக்கியமான பிளே-ஆஃப் சுற்றில் ஆட தயாரான அவர், லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

நிரூபிக்க முடியவில்லை
அந்தப் போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அடைந்தார். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருக்கும் நிலையில் தன் பேட்டிங் பார்மை நிரூபிக்க முடியாமல் தவித்து வருகிறார் ரோஹித் சர்மா.

மும்பை நிலை
மும்பை அணியில் ரோஹித் சர்மா, பொல்லார்டு டக் அவுட் ஆனார்கள். டி காக் 40, சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்தனர். விக்கெட் வீழ்ந்தாலும் மும்பை அணி அதிரடியாக ரன் குவித்தது. அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தி திருப்பம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications