என்ன
இந்த தொடர் மூலம் தன்னை சிறந்த கேப்டன் என்று ரோஹித் சர்மா நிரூபித்து உள்ளார். இந்த தொடர் என்று இல்லை, 2013ல் இருந்தே ஐபிஎல்லில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார். நல்ல அணி. மோசமான அணி என எப்படிப்பட்ட அணியையும் வைத்து அவர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.
உருவாக்கினார்
அதிலும் ஒன்றுமே இல்லாத வீரர்களை முறையாக பயிற்சி மற்றும் வாய்ப்பு கொடுத்து அவர்களை சூப்பர் ஸ்டாராகவும் கூட ரோஹித் சர்மா மாற்றி உள்ளார். பும்ரா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், குர்ணால் பாண்டியா, சூர்ய குமார் யாதவ் ஆகியோரெல்லாம் மும்பை அணியில் வந்த போது... பலருக்கும் அவர்களை தெரியாது.. ஆனால் இவர்களுக்கு முறையான வாய்ப்பு கொடுத்து ரோஹித் சர்மா அவர்களை வளர்த்தெடுத்தார்.
வளர்த்தெடுத்தார்
ஒவ்வொரு தொடரிலும் இளம் வீரர்கள் சொதப்பினாலும் கூட அவர்களை அணியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு அளித்து...அவர்களை பார்மிற்கு கொண்டு வந்து சாம்பியன்களாக மாற்றினார். ரோஹித் சர்மா தன்னை ஒரு சிறந்த வீரர் என்று மட்டுமில்லாமல், சிறந்த கேப்டன், சிறந்த தலைவன் என்றும் நிரூபித்து இருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து 8 சீசன்களாக சொதப்பி வருகிறார்.
சொதப்பல்
மோசமான அணி தேர்வு, அடிக்கடி வீரர்களை மாற்றுவது, களத்தில் நிறைய தவறுகளை செய்வது என்று ஐபிஎல் தொடரில் அடிக்கடி கோலி மோசமாக சொதப்பி வருகிறார். ஒரு கேப்டனாக இந்திய அணியில் கோலி சிறப்பாக செயல்படுகிறார். அதை சந்தேகப்படவே முடியாது. ஆனால், ஐபிஎல் தொடரில் எவ்வளவு சிறப்பான வீரர்கள் இருந்தாலும் கூட கோலி சரியாக கேப்டன்சி செய்வது இல்லை.
ஆடுவது இல்லை
சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஏபிடி, பின்ச், படிக்கல் என்று இந்த சீசனில் பல முக்கியமான வீரர்கள் பெங்களூர் அணியில் ஆடினார்கள். ஆனாலும் கூட பெங்களூர் அணி இந்த முறை கோப்பை அடிக்க முடியாமல் போனதற்கு அந்த அணியின் மோசமான கேப்டன்சிதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. பல முறை வாய்ப்பு கொடுத்தும் கூட தன்னை சிறந்த ஐபிஎல் டி 20 கேப்டனாக கோலி நிரூபிக்கவில்லை.
கோரிக்கை என்ன
இதனால் தற்போது ரோஹித் சர்மாவை இந்திய அணியின் டி 20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமித்து.. அவரின் தலைமையில் இந்தியா டி20உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் மேட்ச்
இதனால் இன்று நடக்கும் போட்டி அதிக கவனம் பெற்றுள்ளது. இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மும்பை வென்றால்.. ரோஹித் சர்மா அதற்கு முக்கிய காரணமாக இருப்பார். இதனால் இன்று மும்பை வென்றால்... ரோஹித் சர்மாவை இந்திய கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆலோசனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.