
நேற்றைய போட்டி
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்தது. விராட் கோலி, பட்டிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் ஏமாற்றம் அளித்தாலும், அதிரடி வீரர் ஏபிடிவில்லியர்ஸ் பொறுப்பாக ஆடி 75 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 170 ரன்கள் வரை அடித்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது.

மிஸ்ராவின் செயல்
போட்டியின் நடுவே டெல்லி வீரர் அமித்மிஸ்ரா செய்த செயலால் கள நடுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்சிபி அணி பேட்டிங் செய்த போது 7வது ஓவரை வீச வந்த அமித் மிஸ்ரா தவறுதலாக பந்தில் எச்சிலை தடவினார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சிலை தடவக்கூடாது என்ற விதியுள்ளது.

எச்சரிக்கை
இந்நிலையில் களத்தில் அமித் மிஸ்ரா பந்தில் எச்சில் தடவுவதை பார்த்த அம்பயர் உடனடியாக அவருக்கு முதற்கட்ட எச்சரிக்கையை விடுத்தார். அம்பயர் கூறுவதை பார்த்த மிஸ்ரா, தான் மறந்துபோய் எச்சில் தடவியதை உணர்ந்தார். பின்னர் அந்த பந்தை வாங்கிய அம்பயர் அதில் சானிடைசர் தடவிக் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஐசிசி விதிமுறை
போட்டியின் போது இந்த தவறை ஒரு முறை செய்தால் அந்த வீரருக்கு வார்னிங் கொடுக்கப்படும். மீண்டும் அதே தவறை அந்த வீரர் செய்தால், சம்பந்தப்பட்ட அணிக்கு 5 ரன்கள் குறைக்கப்படும். அந்த வகையில் நேற்று அமித் மிஸ்ராவுக்கு அம்பயர் வார்னிங் கொடுத்துவிட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications